நெல்லையில் கந்து வட்டி கொடுமையை எதிர்த்து விவசாயிகள் நடைபயணம்... கைது செய்த போலீஸ்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தென்காசி முதல் நெல்லை வரை கந்து வட்டி கொடுமைகளை எதிா்த்து நடைபயணம் காலையில் துவங்கியது. காவல்துறை அனுமதி கிடையாது என்று கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தென்காசி முதல் நெல்லை வரை கந்து வட்டி கொடுமைகளை எதிா்த்து நடைபயணம் காலையில் துவங்கியது. காவல்துறை அனுமதி கிடையாது என்று கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக வாலிபர் சங்கமும், இடதுசாரி மார்க்சிஸ்ட் கட்சியினரும் நடைபயணம் செல்வதென திட்டமிட்டனர். இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில்,
திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த இசக்கி குடும்பம் கந்துவட்டி கும்பலின் சித்ரவதை காரணமாக தீக்குளித்து மாண்டு போயிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் பலமுறை புகார் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே இத்தகைய துயரம் நிகழ்ந்துள்ளது. கந்துவட்டி கும்பலுக்கும், காவல்துறைக்கும் இடையே உள்ள தவறான உறவுகள் காரணமாக மாநிலம் முழுவதும் கந்து வட்டி கும்பல் கடன் பெற்றவர்களை அச்சுறுத்துவது, மிரட்டுவது, கட்டாயமாக சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதனால், கடன் பெற்றவர்கள், தற்கொலை செய்து கொள்வது, ஊரைகாலி செய்து வெளியேறுவது போன்ற நிலைமைகளுக்கு தள்ளப்படுகின்றனர். கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை.
இந்த நிலையில், இசக்கி குடும்பத்தின் தற்கொலைக்கு காரணமான காவல்துறை, வருவாய்த்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலைக்கு தள்ளிய கந்துவட்டிகாரர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஏழைகளுக்கு கடன் வழங்க வேண்டும். இசக்கி குடும்பத்தின் தற்கொலை குறித்தும், கந்துவட்டி கும்பலின் செயல்பாடுகள் குறித்தும் நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசை நிர்ப்பந்திக்கவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி தென்காசியில் துவங்கி திருநெல்வேலி வரை நடைபயணம் நடைபெறவுள்ளது. நவம்பர் 1ம் தேதி தென்காசியில் துவங்கி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நவம்பர் 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
மக்களும், அரசும் செய்யவேண்டியது என்ன என்பதை பிரச்சாரம் செய்வதுதான் நோக்கம். ஆனால் நடைபயணத்திற்கு அனுமதியில்லை என்று கூறி அனைவரும் கைது செய்யப்பட்டனர்.