8 வழி சாலை: விவசாயி தீக்குளிக்க முயற்சி.. கிணற்றில் குதித்த இன்னொருவர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு
பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video
திருவண்ணாமலை: பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அதேபோல, செய்யாறில் 75 வயது முதியவர் ஒருவர் கிணற்றிலேயே விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது.
சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை அமைக்க காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பிலும், 5 மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை, செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அளவீடு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அளவீடு மேற்கொள்ள அதிகாரிகள் வரும்போது, விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, வீடுகளில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தியும், சில விவசாயிகள் விளைநிலங்களில் நட்ட கல்லை பிடுங்கி எறிந்தும், சிலர் தங்களது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர். ஒருசிலர் தங்களது நிலங்களில் கற்களை நடுவதை பார்த்ததும் தாங்க முடியாமல் மயங்கியும் விழுகின்றனர். நேற்றுகூட ஒரு மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனாலும் அதிகாரிகள் தங்கள் பணியினை நிறுத்துவதாக தெரியவில்லை.
இன்று காலையும், நிலம் அளவீட்டு பணி துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி, அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். விவசாயி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதை தொடர்ந்து அளவீட்டு பணியை பாதியிலேயே நிறுத்தி அதிகாரிகள் வெளியேறினர்.
அதேபோல, செய்யாறிலும் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் கிணற்றில் குதித்தார். அவருக்கு வயது 75. அவரை தொடர்ந்து மேலும் 2 பேரும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து, கிணற்றுக்குள் விழுந்தோரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.