விலை இருந்தும் வியாபாரம் இல்லை- வியாபாரிகள் கவலை
நெல்லை: வெங்காயத்திற்கு தற்போது நல்ல விலை இருந்தும் வியாபாரம் சரியாக இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்ற போதிலும் விவசாயிகளிடம் ரூ.15க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இகனால் விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என நெல்லையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல், வேளாண்மை துறை இணை இயக்குநர் சந்திரசேகரன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாடசாமி என்பவர் கூறுகையில் நெல்லை மாவட்டத்தில் கார் பருவ அறுவடை தொடங்க உள்ளது. சேரன்மகாதேவி கோட்டத்தில் ஒரு அறுவடை இயந்திரம் மட்டுமே உள்ளது. தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.775 மட்டுமே வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரத்திற்கும் அதிகமாக வாடகை பெறப்படுகிறது. இதில் புரோக்கர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். புரோக்கர் ஆதரவு இல்லாமல் நெல் அறுவடை செய்யமுடியவில்லை என்றார்.
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கசமுத்து கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் 3 கோட்டங்களிலும் 3 அறுவடை இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. குறைந்தது ஒரு தாலுகாவிற்கு ஒரு இயந்திரமாவது வாங்க வேண்டும். விவசாயிகள், வேளாண்மை அதிகாரிகள், வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள், அறுவடை இயந்திர உரிமையாளர்கள் இணைந்த கூட்டம் நடத்தி வாடகை நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலம் முழுவதுமே 65 அறுவடை இயந்திரங்கள் தான் உள்ளன. தற்போது வெங்காயத்திற்கு மார்க்கெட்டில் நல்ல விலை உள்ளது. ஆனால் கொள்முதல் விலை கணிசமாக குறைந்துள்ளதால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம்" என புகார் தெரிவித்தார்.