தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் ரயில் மறியல்
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. சோழன் விரைவு ரயிலை மறித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாக பல இடங்களில் ரயில் மறியல், சாலை மறியல், விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகின்றன. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
காவிரி வாரியம் அமைக்க கோரி டெல்டா மாவட்டங்களில் இன்றும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அமமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. தருமபுரியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.டி.வி தினகரன் போராட்டம் நடத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை ஐயனாபுரத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் சில மணிநேரங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதே போல தஞ்சாவூரில் சோழன் விரைவு ரயிலை மறித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஆவடி அருகே இந்திய உணவு கழக கிடங்கை முற்றுகையிட்ட நாம்தமிழர் கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.