காவிரி நீரை திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் பந்த்- ஆயிரக்கணக்கான விவசாயிகள் மறியல்!!
திருவாரூர்: காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி டெல்டா பாசன பகுதிகளான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இடதுசாரி விவசாய சங்கங்கள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்து 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்து போன நிலையில் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிடாத்தால் ஒரு போக சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகிவிட்டது என்று விவசாயிகள் கவலையடைந்திருந்தனர்.
இந்நிலையில், காவிரி நீரை திறக்க மற்றுக்கும் கர்நாடக அரசை கண்டிக்கும் வகையிலும், உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இன்று நடைபெற்று வருகிறது. மேலும் 1,000 இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த நிலையை போக்க மத்திய அரசு இனியும் அமைதியாக இருக்காமல் நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் அழைப்பை ஏற்று இந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஏராளமான வியாபாரிகளும் தங்களது கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.