காவிரி நீர் திறப்பு குறைப்பு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நாளை முதல் விவசாயிகள் உண்ணாவிரதம்!!
சென்னை: 12 நாட்களுக்கு 2000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது யானைப் பசிக்கு சோளப் பொரி என்றும் இதனை எதிர்த்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை தொடங்க உள்ளதாகவும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் தொடர்பாக இன்று வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அக். 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை வினாடிக்கு 2000 கன அடி நீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, நீதி மீதான கொஞ்சம் நஞ்சம் உள்ள நம்பிக்கையையும் போகும் அளவுக்கு உள்ளது என்றும், மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசிற்கு உச்சநீதிமன்றம் பணிந்து போய் விட்டதோ என்று தோன்றுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து பி.ஆர். பாண்டியன் ஒன்இந்தியாவிற்கு கூறியிருப்பதாவது:
சுப்ரீம் கோர்ட் 12 நாட்களுக்கு 2000 கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது என்பது யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்த கதையாகத்தான் இருக்கிறது. இதனால் எந்த பயனும் விவசாயிகளுக்கு ஏற்படப் போவதில்லை. சுப்ரீம் கோர்ட் மாற்றி மாற்றி உத்தரவிடுவதன் மூலம் தமிழக மக்களை திசைப் திருப்புகிறது. குழப்பம் விளைவிக்கிறது.
இதனை எதிர்க்கும் வகையில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளோம். நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.