அடுத்த அடி ஆரம்பம் – விலை வீழ்ச்சியால் ரோட்டில் கொட்டப்படும் தடியங்காய்
கோவில்பட்டி: கடுமையான விலை வீழ்ச்சியால் தடியங்காயை விவசாயிகள் ரோட்டில் வீசி விட்டு செல்லும் நிலைமை கோவில்பட்டியில் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, புதுக்கோட்டை, செட்டிக்குறிச்சி, காளான்பட்டி உள்பட பல கிராமங்களில் அதிக பொருள் செலவு இல்லாமல் விளையும் தடியங்காய்களை விளைச்சல் செய்துள்ளனர்.
இங்கு விளையும் பெரும்பாலான தடியங்காய்களை அருகே உள்ள கோவில்பட்டி சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தடியங்காய்கள் கிலோ ரூபாய் 15 முதல் ரூபாய் 20 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
இது போக போக குறைந்து தற்போது ரூபாய் 3 முதல் ரூபாய் 4 வரையே வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் அந்த விலைக்கு கூட வியாபாரிகள் நேற்று மாலை வாங்கி செல்லவில்லை.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள் தடியங்காய்களை பறித்து சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், இந்த ஆண்டு மழை குறைந்த அளவே பெய்ததால் மக்காசோளம், உளுந்து, பயிறு, பாசிபயிறு, சூரியகாந்தி ஆகியவற்றை பயிர் செய்தோம்.
ஆனால் போதிய மழை பெய்யாததால் பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்குமாறு அரசிடம் கேட்டு கோரிக்கை வைத்தோம்.
தற்போது எங்களுக்கு மேலும் இழப்பு ஏற்படுத்தும் விதமாக ரூபாய் 20க்கு விற்ற தடியங்காய் தற்போது வெரும் ரூபாய் 4க்கே கொள்முதல் செய்யப்படுவதால் மார்க்கெட்டுக்கு அவற்றை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அவற்றை சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.