தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குக - மு.க.ஸ்டாலின்
காவிரி டெல்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ரகுநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் வாங்கி விவசாயம் செய்த நெற்பயிர்கள் கருகியதால் மன வேதனை அடைந்த விவசாயி கோவிந்தராஜ், வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன், 37 மரணமடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழத்திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன், 42. இவர், இரண்டரை ஏக்கர் குத்தகை நிலத்தில், 25 நாட்களுக்கு முன், நேரடி நெல் விதைப்பு செய்தார். இப்பகுதி குடமுருட்டி ஆற்றுப் பாசனப் பகுதியைச் சார்ந்தது. ஆற்றில் சரியாக தண்ணீர் வராததாலும், அப்பகுதியில் போதிய அளவுக்கு மழை பெய்யாததாலும், பயிர்கள் காய்ந்தன. இதனால் மனமுடைந்த விவசாயி மரணமடைந்தார். விவசாயிகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தமிழக அரசு, ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றார். மேலும் தண்ணீரின்றி பயிர் செய்ய முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் சோதனைக்கு உள்ளாகும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டார்.
காவிரி டெல்டா பகுதியை பார்வையிட வந்த மத்திய நிபுணர் குழுவிடம், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரங்களை தமிழக அரசு மறைத்துவிட்டதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
விவசாய சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் 25வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், விவசாய சீர் திருத்தங்களை நிறைவேற்றுவதில் 100 புள்ளிகளுக்கு 17.7 புள்ளிகள் மட்டுமே பெற்று தமிழகம் இந்தியாவில் 25 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.