விளைச்சல் இருந்தும் விலை இல்லை... விவசாயிகளைக் கண்ணீர் விட வைக்கும் ‘வெங்காயம்’
நெல்லை: நெல்லை வட்டார பகுதிகளில் விளைச்சல் இருந்தும் வெங்காயம், தக்காளிக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் வட்டாரத்தில் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது அங்கு சின்ன வெங்காயம், பல்லாரி ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. அவை அமோகமாக விளைந்துளளது.
இவற்றை பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெடுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.
வரத்து அதிகம்...
மாலை மட்டும் இரண்டு டன் சின்ன வெங்காயம், ஓரு டன் பல்லாரி ஆகியவை மார்க்கெடுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் வரத்து அதிகமாக இருந்தும் போதிய விலை கிடைக்கவில்லை.
தேக்கம்...
சின்ன வெங்காயம் ரூ.5க்கும், தரமானது ரூ.12க்கும் விலை போனது. இது போல் பல்லாரி ரூ.7 முதல் ரூ.12 வரை விலை போனது. இருந்த போதிலும் எதிர்பார்த்த அளவு விலை இல்லாமல் இருப்பதால் ம்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் அங்குள்ள காய்கறி கடையில் சின்ன வெங்காயம், பல்லாரி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
விவசாயிகள் கவலை...
சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை இல்லாததால் மகசூல் எடுத்த விலை கூட கிடைக்காது என்ற அச்சத்தில் உள்ளனர். பலர் வெங்காயத்தை மகசூல் எடுக்காமல் விளை நிலங்கள் அப்படியே போட்டு வைத்துள்ளனர்.
தக்காளிக்கும் அதே நிலை...
இந்த வட்டார பகுதிகளில் தக்காளி மகசூலும் அதிக உற்பத்தியை தந்துள்ளது. இவற்றை பறித்து காய்கறி விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். ஆனால் இதுவும் கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை போனது. ஆனாலும் தக்காளியை கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தக்காளியை பறிக்காமல் செடிகளில் விட்டு வைத்துள்ளனர்.