மக்களுக்கு நன்மை செய்வோர் ஆட்சிக்கு வர வேண்டும்... வைகோவை சந்தித்தபின் பரூக் அப்துல்லா
சென்னை: மக்களுக்கு நன்மை செய்வோர்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோவை சந்தித்த பின்னர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார்.
சென்னைக்கு வருகை தந்த பரூக் அப்துல்லா நேற்று கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். திமுக- காங்கிரஸ் இடையேயான கூட்டணி குறித்து பேசுவதற்காகத்தான் பரூக் அப்துல்லா வருகை தந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் கருணாநிதியுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, மரியாதை நிமித்தமாக சந்திக்கவே வந்தேன். காங்கிரஸ் சார்பில் நான் கூட்டணி குறித்தெல்லாம் பேசவில்லை; வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற வாழ்த்தினேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று பரூக் அப்துல்லாவை ஹோட்டல் ஒன்றில் முற்பகலில் வைகோ சந்தித்தார். அதன் பின்னர் வைகோவின் வீட்டுக்கு பரூக் அப்துல்லா சென்றார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா, நீண்டநாள் நெருங்கிய நண்பர் என்கிற அடிப்படையில் வைகோவை சந்தித்தேன். மக்களுக்கு நன்மை செய்பவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
ஸ்ரீரவிசங்கருடன்...
இதேபோல் சென்னை வருகை தந்திருந்த வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கரையும் மரியாதை நிமித்தமாக ஹோட்டல் ஒன்றில் வைகோ சந்தித்து பேசியுள்ளார்.