பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து சிறுமி ஸ்ருதி பலி : ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை: பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சிறுமி கீழே விழுந்து பலியான சம்பவத்தில், குழந்தையின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு தாம்பரம் அடுத்த சேலையூரில் தனியார் பள்ளியின் வாகனத்தில் இருந்த ஓட்டை வழியாக, சிறுமி சுருதி தவறி விழுந்து பலியானார். தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில், முடிச்சூரை சேர்ந்த சேது மாதவன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், என்னுடைய மகள் சுருதி, சேலையூரில் உள்ள சியான் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2ம்வகுப்பு படித்து வந்தார். தினமும் அவர் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் பள்ளிக்கூடம் சென்று வந்தார். கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பள்ளி பேருந்தில் வீடு திரும்பினார்.
அப்போது அந்த பேருந்து முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. பஸ்சின் 6வது வரிசையில் மிகப் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அந்த ஓட்டையை ஒரு பலகையை போட்டு மறைத்து இருந்தனர். 6வது வரிசையின் இருக்கையில் அமர்ந்திருந்த என் மகள், அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்தார்.
அப்போது பஸ்சின் பின் சக்கரம் என் மகள் மீது ஏறி இறங்கியது. என் மகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். என் மகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த என் மனைவி, இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடலாலும், மனதாலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார். பேருந்தை முறையாக பராமரிக்காத பள்ளி நிர்வாகம் எனக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும்' என்று கூறியிருந்தார்.
இது குறித்த வழக்கை விசாரித்து வந்த மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம், சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சீயோன் தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பள்ளிச் சிறுமி சுருதி உயிரிழந்த சம்பவத்தில், குழந்தையை இழந்த பெற்றோருக்கு பள்ளி தாளாளர் விஜயன் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சிறுமி ஸ்ருதி உயிரிழந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.