துக்கம் விசாரிக்கச் சென்றபோது பரிதாபம்... லாரி மோதி தந்தை, மகள் பலி
உடன்குடி: துக்கம் விசாரிக்கச் சென்றபோது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதியதில் தந்தையும், மகளும் பரிதாபமாக பலியானார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூரை சேர்ந்தவர் பொன்செல்வன். இவர் உடன்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை மோட்டார் சைக்கிளில் மகள் கீர்த்தனா, உறவினர் முருகன் ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார்.
கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை நான்கு வழிச்சாலை திருப்பத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பொன்செல்வன், அவரது மகள் கீர்த்தனா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்தில் பலியான பொன்செல்வன், கீர்த்தனா ஆகிய இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்