வாரே வா.. சபாஷ் போடுங்க இந்த அப்பாவுக்கு.. கண்டக்டருக்கு பீதியைக் கிளப்பிய கலகல சம்பவம்!
இரண்டரை வயது குழந்தையை கண்டக்டரிடம் விட்டு சென்ற தந்தையினால் பரபரப்பு ஏற்பட்டுது.
Recommended Video
மயிலாடுதுறை: அரசு ஊழியர்களுக்கு கடமை உணர்ச்சி அதிகமா? ஒரு சாதாரண மனிதனுக்கு கடமை உணர்ச்சி அதிகமா? என்பதை சொல்லும் சம்பவம் இது.
மயிலாடுதுறை அருகே உள்ள பகுதி சீனிவாசபுரம். இங்கு வசித்து வரும் இதயத்துல்லா என்பவர் தனது குழந்தை முகமது உசேனுடன் சீனிவாசபுரத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறினார். தனக்கு 40 ரூபாய்க்கு ஒரு டிக்கெட் வேண்டும் என்று கண்டக்டரிடம் கேட்டார்.
அதற்கு கண்டக்டர், "உனக்கு மட்டுமா டிக்கெட், உன் குழந்தைக்கும்தான் எடுக்கணும்" என்றார். இதனால் அதிர்ந்த இதயத்துல்லா, "என் குழந்தைக்கு இரண்டரை வயசுதான் ஆகுது. அதனால எனக்கு மட்டும் டிக்கெட் கொடுங்க" என்றார்.
அதுக்கு கண்டக்டர், "உன் குழந்தைக்கு இரண்டரை வயசுதான் என்பதற்கு என்ன ஆதாரம்? உன் குழந்தையை பாத்தா 3 வயசுக்கு மேலே இருக்கற மாதிரி தெரியுது. அதனால குழந்தைக்கும் டிக்கெட் எடுத்தே ஆகணும்" என கண்டிப்பாக கூறினார். இது வாக்குவாதமாகவே மாறிவிட்டது. பேருந்தோ போய் கொண்டே இருந்தது.
பொறுமையிழந்த இதயத்துல்லா, "என் குழந்தைக்கு இரண்டரை வயசுன்னா நம்ப மாட்டேங்கறீங்க இல்ல? இருங்க... நான் போய் குழந்தையோட பிறப்பு சான்றிதழை கொண்டு வர்ரேன்ன்னு" சொல்லிட்டு, பஸ் நின்றதும், தன் குழந்தையை கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு, வேகமாக இறங்கிவிட்டார். இறங்கியதுடன், வேற பஸ்ஸை பிடித்து வீட்டுக்கும் போய்விட்டார்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத கண்டக்டரோ, எதுவும் புரியாமல் முழித்தார். மற்ற பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். பயணிகள் இருப்பதால், பஸ்ஸை எடுத்தே ஆகணும், குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை.. சிறிது நேரம் தவித்தார். பிறகு குழந்தையை சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ள பேரளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு கிளம்பி சென்றார்.
இதனிடையே வீட்டுக்கு சென்று சான்றிதழை எடுத்து கொண்டு, வேற பஸ் பிடித்து இதயதுல்லா பேரளம் வந்தார். இதற்கே 2 மணி நேரம் ஆகிவிட்டது. காவல்நிலையத்தில் இருந்த கூட்டத்தையும், அதில், தன் குழந்தை நின்று கொண்டிருந்ததை பார்த்ததும் அங்கே வந்துவிட்டார். போலீசாரிடம் எல்லாவற்றையும் கூறி முடித்தார்.
தான் கொண்டு வந்திருந்த பிறப்பு சான்றிதழையும் காட்டி, தன் குழந்தைக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது என்றார். பிறகுதான், தன் குழந்தையை வாங்கி சென்றார். போகும்போது சும்மா செல்லாமல், கட்டாயப்படுத்தி தன் குழந்தைக்கு டிக்கெட் எடுத்தே ஆகவேண்டும் என்று கூறிய கண்டக்டர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று ஒரு புகாரையும் கொடுத்துவிட்டு சென்றார்.