மகன் உடலை பெற டெல்லி சென்றடைந்தார் முத்துகிருஷ்ணன் தந்தை.. தற்கொலைக்கு வாய்ப்பில்லை என கதறல்
முத்துகிருஷ்ணன் உடலை பெறுவதற்காக டெல்லி சென்ற அவரின் தந்தை, சிபிஐ விசாரணைக்கு உறுதியளித்தால்தான் உடலை பெறுவேன் என்று அறிவித்துள்ளார்.
சென்னை: தற்கொலை செய்து கொண்ட ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடலை பெறுவதற்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்றடைந்த அவரின் தந்தை ஜீவானந்தம் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
சேலம் சாமிநாதப்புரத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தின் மகன் முத்துக்கிருஷ்ணன். 30 வயதான இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்தார்.
ஹோலி கொண்டாட்டத்திற்காக திங்கள்கிழமை டெல்லியில் முனிர்கா என்ற இடத்தில் உள்ள தனது நண்பர் அறைக்கு சென்றுள்ளார். பின்னர் மர்மமான முறையில் அந்த வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். முத்துகிருஷ்ணன் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவரது தந்தை ஜீவானந்தம் கூறியிருந்தார். இந்நிலையில், முத்துகிருஷ்ணன் உடலை பெறுவதற்காக அவர் டெல்லி சென்றார்.
ஆனால், சிபிஐ இதுகுறித்து விசாரிக்க அரசு உறுதிமொழியளித்தால்தான் முத்துகிருஷ்ணன் உடலை வாங்குவேன் என அறிவித்துவிட்டார். மேலும், பிரேத பரிசோதநையை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார். முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் கதறி அழுதார்.