ஒரு நாளைக்கு 20 முறை வலிப்பு.. என் மகனை கருணை கொலை செய்து விடுங்கள்.. ஏழை தந்தையின் குமுறல்
10 வயது மகனை கருணை கொலை செய்ய வேண்டும் என்று தகப்பன் மனு செய்துள்ளார்.
சென்னை: 10 வருடங்களாக கண்ணீரும், கவலையும், சோகமுமாய் நாட்களை ஓட்டிய ஏழை தகப்பனின் கண்ணீர் சம்பவம் இது!
கடலூரை சேர்ந்தவர் திருமேனி. இவர் ஒரு டெய்லர். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறந்த போதிருந்தே பேசும் திறன் கிடையாது. மற்றவர்களை அடையாளம் காணவும் முடியாது. மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வலிப்பும் சேர்ந்து கொண்டது.
இவர், போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை... குழந்தைகள் நல டாக்டர்களிடம் மகனை அழைத்து சென்றும் எந்த பிரயோஜனமும் இல்லை. பெத்த மகன் கண் எதிரே வலிப்பு வந்து துடிக்கும்போது இவரால் அதனை தாங்கி கொள்ளும் சக்தியும் இல்லை. ஒரு நாளைக்கு 20 முறை வலிப்பு வந்தால் அந்த பிஞ்சு உடம்பு என்னாகும்? சரி, வலிப்பு குறைவதற்காக மருந்து கொடுத்தால், வலிப்பு இன்னும் அதிகமாகத்தான் ஆகிறதாம்.
குணப்படுத்தவே முடியாது
சாப்பாட்டையும் சாதாரணமாக அவனுக்கு கொடுக்க முடிவதில்லை. ஒவ்வொரு முறை சாப்பாடு தரும்போதும் போராட்டம்தான். மிகவும் சிரமப்பட்டுதான் ஆகாரம் தர வேண்டி உள்ளது. மகனை அழைத்து சென்று வந்த அனைத்து டாக்டர்களும் சொல்லிவிட்ட கடைசி வார்த்தை, "குணப்படுத்தவே முடியாது" என்பதுதான்.
மன உளைச்சலில் குடும்பம்
இடிந்தே போய்விட்டார் திருமேனி. மகனை எங்கு அழைத்து செல்வது, கண்ணெதிரே துடித்து துடித்து விழும் மகனை எப்படி குணமாக்குவது, கையிலோ பணம் இல்லை, வசதியோ குறைவு... எல்லாம் சேர்ந்து திருமேனி நிலைகுலைந்து போனார். தூக்கம், சாப்பாடு இன்றி தவித்தார். குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளானது. கடைசியாக ஒரு முடிவு எடுத்தார். அதன்படி மகனை கருணை கொலை செய்துவிடுவதுதான்.
3 பேர் கொண்ட குழு
அதற்காக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விவரங்களை எல்லாம் அதில் சொல்லியிருந்தார். என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "சிறுவனின் நோய் மற்றும் உடல்நிலை குறித்து முதலில் ஆய்வு செய்யவேண்டும்" என்று கூறி, 3 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவினை அமைத்து உத்தரவிட்டனர். சிறுவனின் பரிசோதனை குறித்த அறிக்கையை செப்டம்பர் 10-ம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நம்பிக்கை பிடிப்பு
அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவர் ரெஜினால்ட், ஓய்வுபெற்ற குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன், மத்திய அரசின் சுகாதார திட்டங்களுக்கான தலைமை அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர்தான் அந்த மருத்துவ நிபுணர்கள். பரிசோதனை முடிவில்தான் சிறுவனின் உடல்நிலை நிலவரம் தெரியவரும். பிறந்ததிலிருந்தே அவதியும், வலியும், இன்னலும், அல்லலும் பட்ட தன் மகன் அனைத்திலிருந்தும் விடுபட்டு மீண்டு வந்துவிடமாட்டானா எனும் நம்பிக்கைப் பிடிப்பில் திருமேனி காத்திருக்கிறார்!