ஓயாத 'அரண்மனை சதி' - வளர்ப்பு மகன் மீது 'செட்டிநாட்டு அரசர்' எம்.ஏ.எம். ராமசாமி கொலை முயற்சி புகார்!
சென்னை: சொத்தை அபகரிப்பதற்காக வளர்ப்பு மகன் தம்மை வீடு புகுந்து கொலை செய்ய முயற்சித்ததாக 'செட்டிநாட்டு அரசர்' தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி புகார் தெரிவித்துள்ளார்.
செட்டிநாட்டு அரசரும் தொழிலதிபருமான எம்.ஏ.எம். ராமசாமி 20 ஆண்டுகளுக்கு முன்னர் வளர்ப்பு மகனாக அய்யப்பன் என்பவரை தத்தெடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக அய்யப்பனுக்கும் எம்.ஏ.எம். ராமசாமிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த மோதல் வெடித்து அம்பலமானது. வளர்ப்பு மகன் அய்யப்பன் மீது எம்.ஏ.எம். ராமசாமி போலீசில் புகார் கொடுத்தார். அவர் தமது சொத்துகளை அபகரிப்பதாகவும் எம்.ஏ.எம். ராமசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து எம்.ஏ.எம். ராமசாமியை பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருந்து அய்யப்பன் கழற்றிவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை எம்.ஏ.எம். ராமசாமி சந்தித்து கூறியதாவது:
அய்யப்பனுக்கு 90 சதவிகித சொத்துக்களை கொடுத்துவிட்டேன். எஞ்சியுள்ள சொத்தை அபகரிக்க அவரும் அவரது ஆட்களும் வீடு புகுந்து கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் அவரும் அவரது ஆட்களும் என்னுடைய வீட்டில் புகுந்து வேலையாட்களை அடித்து காயப்படுத்தியதுடன் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து நாசமாக்கியுள்ளனர்.
அய்யப்பன் என்னுடைய வளர்ப்பு மகனே கிடையாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு எம். ஏ. எம். ராமசாமி கூறினார்.
இதனைத் தொடர்ந்து எம்.ஏ.எம்.ராமசாமி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, அய்யப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில், எம்.ஏ.எம். ராமசாமி வீட்டில் பணிபுரிந்த பணியாட்கள் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.