எந்த தந்தைக்கும் இப்படி ஒரு கொடுமை வரக் கூடாது... விருதுநகரில் வேதனை சம்பவம்!
பெற்ற மகனை கொன்று தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Recommended Video
விருதுநகர்: பெற்ற மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் விருதுநகரை சேர்ந்த ஒருவர்.
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் முருகன். ஒரு தச்சுப்பட்டறையை நடத்தி வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் 2 மகன்கள் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். 3-வது மகன் பெயர் ராகுல். இவர் கை, கால் செயல்பட முடியாத ஒரு மாற்றுத் திறனாளி. அதுமட்டுமின்றி அவரால் வாய் பேசவும் முடியாது.
வேதனையில் துடித்த தந்தை
அதனால் ராகுலை பெற்றோர் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர். எவ்வளவுதான் அக்கறையை கொட்டி வளர்த்தாலும், முருகனுக்கு மகனை நினைத்து எந்நேரமும் கவலைபட்டுக் கொண்டே இருந்தார். இருந்தாலும் ராகுலை விட்டு எங்குமே செல்லாமல், கூடவே இருந்து அரவணைத்து கொண்டார். தன் மகனுக்கு இந்த நிலைமை ஆகிவிட்டதே என்று வேதனையில் துடித்த முருகன், இனியும் தன் மகன் இப்படி கஷ்டப்படுவதை பார்க்க விரும்பாமல் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
இமை போல காத்த மகன்
அதன்படி இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த ராகுலை தூக்கிக் கொண்டு வீட்டின் வெளிப்புறம் வந்தார். அங்கு முன்பகுதியில் 7 அடியில் இருந்த ஒரு தண்ணீர் தொட்டியில் ராகுலை போட்டார். பொத்தி பொத்தி வளர்த்து, இமை போல காத்த மகனை அந்த தண்ணீரிலேயே மூழ்கடித்தார். இதில் ராகுல் மூச்சுத்திணறி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
தண்ணீர் தொட்டியில் மகன்
பிறகு கதறி அழுதவாறே வீட்டிற்குள் ஓடிய தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் தூங்கி எழுந்ததும், அறைக்குள் சென்ற பாக்கியலட்சுமி கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து பதறினார். அலறியடித்து கொண்டு வெளிப்பக்க கதவை திறந்தால், அங்கே தன் மகன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பிணமாக கிடப்பதை கண்டு நடுங்கி கதறினார்.
அதிர்ச்சியில் மக்கள்
இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தந்தை-மகன் உடல்களை கைப்பற்றியதுடன் இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். மகன் படும் நரக வேதனையை சகிக்க முடியாத தந்தை, அவனை கொலையும் செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.