குடிச்சிட்டு உடம்பெல்லாம் கடிப்பார்.. சூடு வைப்பார்.. ஊசியால் குத்துவாரு.. பதற வைக்கும் அவலம்!
4 வயது குழந்தைக்கு அவளது தந்தை கொடூரமான சித்திரவதை செய்துள்ளார்.
மதுரை: குடித்துவிட்டால் அப்படியா கண்ணு தெரியாமல் போய்விடும்? மகள் என்றும் பாராமல், 4 வயது குழந்தை என்றும் பாராமல், ஒரு உயிருள்ள பிஞ்சு என்றும் பாராமல் ஒரு தகப்பன் செய்யக்கூடிய காரியமா இது?
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி பகுதியில் பகுதியில் வசித்து வருபவர் சசி. இவரது மனைவி கௌரி. சசிக்கு வயது 28, கௌரிக்கு வயது 26. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாள். அவள் பெயர் யோகா. சசி-கௌரி இருவரும் நடன கலைஞர்கள்.
ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மேடையில் நடனமாடி வருபவர்கள். இதனால் இவர்களுக்கு கிராக்கி அதிகம். நிறைய நிகழ்ச்சிகள் புக் ஆகி கொண்டே இருக்கும். இருவரும் வீட்டிலேயே இருக்க நேரம் இருப்பதில்லை. காலையில் வீட்டைவிட்டு கிளம்பினால் அவ்வளவுதான்.. திரும்பி வர நடுராத்திரி ஆகிவிடும். அதனால் ஒரே மகளையும் சரியாக கவனிக்க முடிவதில்லை.
உடம்பெல்லாம் காயம்
அதனால் எப்போது வெளியே போனாலும் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக்க சொல்லிட்டு அங்கே விட்டு விட்டு போய்விடுவார்கள். அக்கம்பக்கத்தினர்தான் அந்தக் குழந்தைக்கு தேவைப்படும்போதெல்லாம் சாப்பாட்டை கொடுத்து கவனித்து வந்துள்ளனர். நடுராத்திரி வந்து குழந்தையை கூப்பிட்டு கொள்வார்கள். இந்நிலையில் வழக்கம்போல் தம்பதி இருவரும் குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு நடனமாட கிளம்பிவிட்டனர். அப்போது அந்த வீட்டிலுள்ளவர்கள், சிறுமியின் உடலில் நிறைய காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, "இதெல்லாம் என்னம்மா, முழுக்க காயங்களா இருக்கே?" என கேட்டனர்.
உடம்பெல்லாம் கடிப்பாரு
அப்போது அந்த குழந்தை, "தினமும் அப்பா நைட் நேரங்களில் குடித்துவிட்டு வருவார். அப்போ என்னை குடிபோதையில் உடம்பெல்லாம் கடிப்பார். சிகரெட்டு பிடிச்சுக்கிட்டே எனக்கும் சூடு வைப்பாரு. ஒரு ஊசியை கொண்டு வந்து என்னை குத்துவாரு" என்று சொல்லிக் கொண்டே விக்கி விக்கி அழ தொடங்கிவிட்டாள். அதைக்கேட்ட அங்கிருந்தவர்கள் உடம்பெல்லாம் நடுங்கியது.
போலீசில் புகார்
அவர்களால் குழந்தை சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை. காலம் தாழ்த்தாமல் உடனடியாக அகில இந்திய மாதர் சங்கத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் கரிமேடு காவல்நிலையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சிறுமியின் தந்தை சசி, தாய் கவுரியை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சைக்கோ தம்பதி
கொடூரத்தின் உச்சம் இது.உண்மையிலேயே இவர்கள் எல்லாம் ரத்தம், சதைகளால் ஆன மனிதர்கள்தானா? நினைச்சாலே கேவலமாகவும், ஆத்திரமாகவும்தான் வருகிறது. நல்லவேளை, அந்த சைக்கோ தம்பதியிடமிருந்து குழந்தை தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.