அப்பல்லோ வாசலில் உட்கார்ந்து பாத்திமா பாபு பூஜை !
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் உட்கார்ந்து டிவி செய்தி வாசிப்பாளர் பாத்திமாபாபு உள்ளிட்ட அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் பூஜை செய்தனர்.
முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 16 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்படும் அறிக்கை மட்டுமே தொண்டர்களுக்கு ஆறுதலான செய்தியாக உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை வாசலில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கூடி ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். தினமும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற அவர் சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் நடிகர் குண்டு கல்யாணத்தின் மகள் யோகலட்சுமி, டிவி செய்தி வாசிப்பாளர் பாத்திமாபாபு மற்றும் அதிமுக மகளிர் அணியினர் உள்பட பலர் தரையில் உட்கார்ந்து பூஜை செய்தனர்.
மாஃபா பாண்டியராஜன் பிரார்த்தனை:
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஏற்பாட்டில், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையராக இருக்கும் மா.பிரகாஷ் உள்ளிட்டோர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.