சரத்குமார் அணி ஆதரவாளர் பாத்திமா பாபு ஜெயா டிவியிலிருந்து நீக்கம்?
நடிகர் சங்கத் தேர்தலில் எந்த அணிக்கும் ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த கலைஞர்கள் செயல்படக் கூடாது என்ற கட்சி தலைமை உத்தரவை மீறி, சரத்குமார் அணிக்கு ஆதரவாக செயல்பட்டதால் நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு அதிமுகவிலிருந்தும் ஜெயா டிவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளகது.
நடிகர் சங்கத் தேர்தல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திரையுலகில். இந்தத் தேர்தலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் லேட்டஸ்ட் வரவு பாத்திமா பாபு. அதிமுகவில் இருக்கும் அவர், ஜெயாதொலைக்காட்சியில் செய்திகளும் வாசித்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் வேலைகள் தொடங்கியதும், அதிமுகவைச் சேர்ந்த நடிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம் ஆனால் எந்தஅணிக்கும் சார்பாக இயங்கக் கூடாது என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டது.
இதைமீறி சரத்குமார் அணியினர் ரஜினியைச் சந்திக்கச் சென்றபோது, அந்தஅணியினருடன் பாத்திமா பாபுவும் சென்றார்.
இதனால் அவர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கட்சியிலிருந்தும் ஜெயா தொலைக்காட்சியிலிருந்தும் பாத்திமா பாபு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..
ஆனால் பாத்திமா பாபுவிடம் கேட்டபோது, "அது தவறான செய்தி, இந்த வாரத்தில் மட்டும் நான்கு நாட்கள் நான் செய்திவாசித்தேன், கட்சித் தலைமை என்ன சொல்லியிருக்கிறதோ அதன்படி நான் நடந்துகொள்கிறேன் என்கிறார்.