கருணாநிதி ஆட்சியில் அவர் குடும்பத்திற்கு மட்டுமே வளர்ச்சி, ஆனால் அம்மா ஆட்சியிலோ...: பாத்திமா பாபு
கிருஷ்ணகிரி: கருணாநிதி ஆட்சியில் அவரது குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகை பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளரான சி. கோவிந்தராஜை ஆதரித்து நடிகை பாத்திமா பாபு பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள பெண்கள் பயமில்லாமல் வாழ உலகிலேயே அனைத்து மகளிர் காவல் நிலைய திட்டத்தை அமல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. திமுக ஆட்சியில் பெண்கள் 8 மணிக்கே வீட்டில் அடைந்துவிடுவார்கள். அதன் பிறகு வெளியே வர அஞ்சும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சரியில்லாத கயவர்களின் ஆட்சியாக இருந்தது.
கருணாநிதி ஆட்சி செய்கையில் அவரது குடும்பம் மட்டும் தான் வளர்ச்சி பெறும். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியிலோ சாதாரண தொண்டர் கூட அமைச்சராக முடியும் என்றார்.
தியாகு:
திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காமராஜை ஆதரித்து நடிகர் தியாகு வெள்ளிக்கிழமை நன்னிலத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக உள்ள காமராஜுக்கு கடவுளின் ஆசீர்வாதம் அதிகமாக உள்ளது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தான் காரணம் என்றார்.