ஒரு "ஷாக்" செய்தி.. தூத்துக்குடி அனல் மின் நிலைய முதல் யூனிட்டில் உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி: கடும் கோடை தமிழகத்தை வாட்டி வரும் நிலையில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வரும் நிலையில், தூத்துக்குடி முதலாவது யூனிட்டில் திடீர் பழுதால் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிச் செய்தி வந்துள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்த 1979ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு தலா 210 மெகா வாட் திறனுள்ள 5 யூனிட்டுகள் மூலம் 1050 மெகா வாட் வரை மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த 5 யூனிட்டுகளும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை தாட்டியும் இயங்கி வருவதால் அங்கு அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பததி முடங்கி வருகிறது.
இதனால் அவற்றில் சில கடைசி யூனிட்டுகள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் மின் நுகர்வு அதிகரிப்பு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையம் ஓய்வில்லாமல் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த மின் உற்பத்திக்கு இடையே நேற்று மாலை திடீரென அனல் மின் நிலைய முதல் யூனிட்டில் பாய்லரில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் அது செயல்படாமல் உனடியாக நிறுத்தப்பட்டது. மின உற்பத்தி நிறுத்தப்பட்டதால் அங்கு 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பழுதை சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலத்தில் மட்டும் இங்குள்ள யூனிட்டுகளில் 25 தடவைக்கும் மேல் பழுது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.