”நிக் நேம்” வைத்தால் ஆப்பு வைக்கும் பேஸ்புக்- மார்க் பையனால் மாட்டிக் கொண்டு முழிக்கும் "தமிழர்கள்"
சென்னை: ஃபேஸ்புக்கில் விதம் விதமாக டிசைன் டிசைனாக பெயர் வைத்து கலந்து கட்டி கலக்கிக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக தமிழில் வாயில் நுழையாத வகையிலோ, இல்லை உண்மையான பெயரை மறைத்து வைத்தாலோ அவர்களது கணக்குகளை பாரபட்சமில்லாமல் முடக்கி வருகின்றார் நம்ம மார்க்.
இதனால் தமிழகத்தின் பிரபலமானவர்கள் கூட பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலரும் தங்களுடைய உண்மையான பெயருக்கு மாறிக் கொண்டும் இருக்கின்றனர்.
அப்படி ஆங்கிலம் அல்லாத வேறு பெயர்களிலும், புனைப் பெயர்களிலும் ஃபேஸ்புக் பக்கம் இருந்தால் உடனடியாக கணக்கு முடக்கப்பட்டு விடுகின்றதாம். பின்னர் சரியான விவரங்கள் அளித்தால் ஒழிய நம்முடைய பக்கத்தை மீட்க முடியாதாம்.
மாட்டி விட்ட மார்க்:
இந்த வரிசையில் முக்கியமாக சிக்கி மார்க்கால் பெரும் பாட்டிற்கு உள்ளாகி இருப்பவர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான "மனுஷ்ய புத்திரன்". அவருடைய புனைப்பெயர் மனுஷ்ய புத்திரன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது ஒரிஜினல் பெயர் பலருக்கும் தெரியாது. ஆனால், இது தெரியாமல் அந்த "மார்க் பையன்" அவரை மிகவும் அழைக்கழித்துள்ளார்.
பயங்கர தகராறு:
இதுகுறித்து தன்னுடைய புனரமைக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் அவர், "மனுஷ்ய புத்திரன் என்கிற எஸ். அப்துல் ஹமீதுவாகிய நான்.. கடந்த பதினைந்து நாட்களாக எனக்கும் ஃபேஸ்புக்கிற்கும் பயங்கர தகராறு, மூன்று முறை என் கணக்கு முடக்கப்பட்டது. ஒரு பயங்கரவாதியை நடத்துவதுபோல நடத்தினார்கள்.
புனைப் பெயரெல்லாம் கூடாது:
என் பாஸ்போர்ட்டையெல்லாம் கேட்டார்கள். கடைசியில் புனைப்பெயர்களுக்கு இடமில்லை, உங்கள் ஆவணங்களில் இருக்கும் இயற்பெயரில்தான் கம்பெனியை நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். மனுஷ்ய புத்திரன் என்கிற பெயரில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பொதுவெளியில் இயங்கி வந்திருக்கிறேன்.
களைப்படையச் செய்த ஃபேஸ்புக்:
இப்படி ஒரு நெருக்கடி ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஃபேக் ஐடிக்கும், புனைப்பெயருக்கும் வித்தியாசம் தெரியாத இந்த பைத்தியக்காரத்தனமான அணுகுமுறையின் முன் போராடி களைத்துவிட்டேன். ஃபேஸ்புக்கை விட்டுவிடலாம் என்றுகூட தோன்றுகிறது. சொந்தங்களே..உங்களை எப்படி விட்டு விட்டுச் செல்வது என்று தடுமாறுகிறேன்.
குழப்பமடையாதீர்கள் பிளீஸ்:
இனி என் கணக்கு abdul hameed.s ( manushya puthiran) என்பதாக காட்சியளிக்கும். யாரும் குழப்பமடைய வேண்டாம்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
புகைச்சலைக் கிளப்பும் ஃபேஸ்புக்:
பொய்யான ஐடிகளை முடக்குவதற்காக இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் எடுத்திருந்தாலும், ஒருவருடைய நண்பர்கள் வட்டாரம், அவருடைய பதிவுகள் ஆகியவற்றிலும் சற்றே கவனம் செலுத்தலாம்.
தமிழுக்கே தடையா?:
மேலும், தமிழில் பெயர் வைத்திருக்கின்ற காரணத்திற்காகவும் அவர்களுடைய பெயர்களை புனைப்பெயர்களாகக் கருதி முடக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது ஃபேஸ்புக். இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் புதிய புகைச்சலையும் கிளப்பியுள்ளது.
சிக்கி சின்னாபின்னமாகும் வலையாளர்கள்:
எனினும், நம்முடைய பேஸ்புக் பக்கத்தில் "birth name" என்பதில் உண்மையான பெயரினை பதிவு செய்தால் நம்முடைய பக்கம் முடக்கப்படுவதைத் தடுக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. எது எப்படியோ மார்க் விரித்துள்ள இந்த வலையில் ஏடாகூடமாக சிக்கி இன்னும் யாரெல்லாம் பெயரை மாற்றிக் கொள்ளப் போகின்றோமோ? அந்த மார்க்குக்கு மட்டுமே வெளிச்சம்!
இந்த ஆங்கில "ஏகாதிபத்தியத்துக்கு" எதிராக யாராவது போராட்டம் அறிவித்தால் நல்லது..!