மீனு, மட்டனு, சிக்கனு.. ஆளைத் தூக்கும் பிரியாணி.. ஜூஸ் வேற.. யாருக்குன்னு நினைக்கிறீங்க!
ஆய்வுக்கு சென்ற அதிகாரிக்கு பள்ளியில் விருந்து வைக்கப்பட்டுள்ளது.
வேலூர்: என்ன வேலையா போனோமோ அந்த வேலையை மட்டும் பாத்துட்டு வர வேண்டியதுதானே? அதை விட்டுட்டு இப்படியா செய்றது?
தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு சென்று வருவது வழக்கம். அரசு பள்ளி எப்படி இருக்கிறது? அவற்றின் தரம் என்ன? பள்ளியின் சூழல் என்ன? ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்துகிறார்களா, மாணவர்கள் ஒழுக்கமாகவும், நன்றாகவும் இருக்கிறார்களா? இது போன்றவற்றை எல்லாம் ஆய்வு செய்வதுதான் இவர்களுக்கு வேலை. இந்த பழக்கம் நீண்ட காலமாகவே நம் நாட்டில் இருந்து வருகிறது.
ஆய்வுக்கு சென்ற அதிகாரி
ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாகிவிட்டது. பேரணாம்பட்டு ஒன்றிய தொடக்கக்கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக இருப்பவர் மோகன். இவர், 2 நாளைக்கு முன்னாடி, பேரணாம்பட்டு அடுத்த எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்றிருக்கிறார். அதற்கு காரணம் அந்த பள்ளியில் குடிநீர், முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் இன்றி மாணவர்கள் தவிக்கும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்ததுதான்.
தடபுடல் விருந்து
போனவர் பள்ளியை ஆய்வு செய்துவிட்டு வராமல் மதிய விருந்து சாப்பிட உட்கார்ந்துவிட்டார். ஆய்வுக்கு போன அதிகாரிக்கு வகுப்பறையிலேயே தலைவாழை இலை போட்டு, அதில் மீன், கறி, பிரியாணி என தடபுடல் விருந்து பரிமாறப்பட்டது. கிட்டத்தட்ட 15 வகையான வெரைட்டி சாப்பாடு இந்த இலையை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
குரூப் போட்டோ
வந்த அதிகாரியும் இலையில் இவைகளை பார்த்ததும், ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்துவிட்டார். 15 வகை உணவையும் ஆசை தீர ருசித்து ருசித்து சாப்பிட்டு முடித்தார். இதெல்லாம் போதாதென்று ஃபினிஷிங் டச்-ஆக ஜூஸ் வேறு வந்தது. அதையும் வாங்கி குடித்தார். இப்போது அடுத்தபடியாக போட்டோ செக்ஷன். 11 ஆசிரியர்களுடன் நின்று போட்டோ எடுத்து கொண்டார் (எடுக்கும்போது ஏப்பம் விட்டாரா என்று தெரியவில்லை).
பள்ளி குறைகள் என்னானது?
இலையில் சாப்பிட்டது முதல் குரூப் போட்டோக்கள் வரை தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு அதிகாரி பள்ளிக்கு போனது எதற்காக? அங்கு குறைகள் ஏதேனும் உள்ளதா? இருந்தால் எப்படி களைவது என்பதை பார்க்கத்தானே? இப்படி விருந்தில் உட்கார்ந்து மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு வந்தால் என்ன அர்த்தம்? பள்ளி குறைகளை கண்டிக்கவோ? கேட்கவோ கூடாது என்பதற்காகவா?
கல்வித்தரம் மேம்படுமா?
இப்படி அதிகாரிகள் விருந்தில் உட்கார்ந்தால், எப்படி அந்த பள்ளியின் குறைகளையோ, சீர்கேடுகளையோ துணிந்து கேட்க முடியும்? "விருந்து எதற்காக? பள்ளியுள்ள குறைகளை மறக்கடிக்கவா என்ற வாசகங்களுடன்" அதிகாரி போட்டோ தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. கல்வித்துறை இதில் உடனடியாக தலையிட வேண்டும். இதுபோன்ற அதிகாரிகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், ஆய்வு என்றால் என்ன என்பது குறித்து போதிய பயிற்சியை முதலில் வழங்க வேண்டும். அப்போதுதான் கல்வித்தரம் மேம்படும்!!!