இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். பாஜக: பினராயி விஜயன் சாடல்
இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இறங்கியுள்ளன என கேரளா முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.
சென்னை: இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க ஆர்.எஸ்.எஸ்., பாஜக முயற்சிக்கின்றன; ஆகையால் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் போராட்டங்கள் தொடர வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாட்டில் பினராயி விஜயன் பேசியதாவது:
இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலானது. நாடு விடுதலை பெற்றது முதலே மாநிலங்களின் சுயாட்சி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
மாநில அரசுகள் கலைப்பு
நாம் கூட்டாட்சி தத்துவம் குறித்து பேசினாலும் தற்போது மத்தியில் ஒற்றை அதிகார குவிப்புதான் நடைபெறுகிறது. தற்போதும் மாநில அரசுகளை நினைத்தால் மத்திய அரசு கலைக்கும் சூழல்தான் உள்ளது.
அதிகார துஷ்பிரயோகம்
நாட்டிலேயே 1959-ல் முதன் முதலாக கேரளா மாநில அரசைத்தான் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. மாநிலங்களில் பெரும்பான்மை இருந்தபோதும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்படுகின்றன.
கூட்டாட்சியை சிதைக்க முயற்சி
அரசியல் சாசனத்தில் கூட்டாட்சி தத்துவமே முதன்மையானதாக இருக்கிறது. தற்போது ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுகிறது. மாநிலங்களை பலவீனப்படுத்தி மத்திய ஒற்றையாட்சியை வலுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
கூட்டாட்சிக்கான போராட்டங்கள் அவசியம்
ஆகையால் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளையும் போராட்டங்களையும் நாம் தொடர வேண்டும். நாட்டில் ஒற்றையாட்சி முறையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., பாஜக முயற்சிக்கின்றன.