விவசாயிகள் என்னை அவமானப்படுத்தி விட்டனர்.. பொன். ராதாகிருஷ்ணன் புலம்பல்
விவசாயிகள் தம்மை அவமானப்படுத்தி விட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெல்லி: விவசாயக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராடி வரும் விவசாயிகள் மத்தியில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். விவசாயிகள் இதனை ஏற்க மறுக்கவே, தன்னை விவசாயிகள் அவமானப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.
கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் அரை நிர்வாணமாக போராடி வருகின்றனர்.
சாலைகளில் படுத்து உருண்டு போராடிய அவர்கள் மொட்டையடித்தும், தலைகீழாக நின்றும், நாடாளுமன்றத்தின் முன்பு நிர்வாணமாக ஓடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 நாட்களாக போராட்டம்
கடுமையான வெயில், இரவில் குளிர் என வாட்டி வதைக்க தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாள்தோறும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தங்களை அழைத்து பேசும் வரை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கடன் தள்ளுபடியில்லை
இதனிடையே, தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொந்தளிக்க செய்துள்ளது.
பொன். ராதாகிருஷ்ணன்
நேற்று தரையில் மண்சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று உடல் முழுவதும் எழுதி வைத்துக்கொண்டு போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. தமிழக பிரதிநிதிகள் போராட்டம் பற்றி பேசியுள்ளனர். எனினும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்றும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார்.
கைவிட வேண்டும்
விவசாயிகளின் போராட்டம் உணர்வுப்பூர்வமானது. மோடி அரசு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொண்டு செல்வேன். விவசாயிகள் மத்திய அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும். போராட்டத்தினை கைவிட வேண்டும் என்றார்.
கடன் தள்ளுபடி
தமிழக அரசுதான் கடன் தள்ளுபடி பற்றி அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயக் கடன் தள்ளுபடியில் தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்யவில்லை என்று கூறிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் கூட கடன் தள்ளுபடி செய்யவி்ல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். விவசாயக் கடன் வசூலில் கெடுபிடியை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அவமானம்
கோரிக்கைகளை எழுதிதர விவசாயிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் என்று கூறிய பொன். ராதாகிருஷ்ணன். தன்னை எளிதில் தொடர்பு கொள்ள முடியுமே என்றும் ஏன் தன்னுடைய வேண்டுகோளை ஏற்க விவசாயிகள் மறுக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார். பொன். ராதாகிருஷ்ணன் பலமுறை விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.