ஃபெஃப்சி ஊதிய பிரச்சினைக்கு சுமுக தீர்வு.. நாளை முதல் சினிமா படப்பிடிப்புகள் ஆரம்பம்
சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், ஃபெஃப்சி நிர்வாகிகளுக்கும் இடையே ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து, நாளை முதல் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்குகின்றன.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (ஃபெஃப்சி) இணைந்துள்ள தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக, தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இக்கோரிக்கைகள் தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், ஃபெஃப்சி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரையில் படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்தது. அதன்படி, கடந்த 27-ம்தேதி முதல் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், ஃபெஃப்சி நிர்வாகிகளுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்குமிடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஊதிய பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளதால், இன்று மட்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்சி தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தாலும், சண்டைப் பயிற்சியாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. அதனையும் சுமுகமாக முடிக்கும் முயற்சியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.