தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி சாக போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு
தேனி: சொந்த நிலத்திற்குள் நுழைய விடாமல் உறவினர்கள் மிரட்டுவதாக கூறி கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டியபடி, தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் போராட்டம் நடத்தினார்.
தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்தவர் அச்சுதானந்தன். இவரது மகன்கள் குணசேகரன், சீனிவாசன், ஜெயக்குமார், ஸ்ரீதர். இவர்களில் ஜெயக்குமாருக்கு பூர்வீக சொத்தில் 1.6 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு செல்ல விடாமல் ஜெயக்குமாரை அவரது சகோதரர்கள் தடுத்து அடித்து விரட்டியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ஜெயக்குமாரின் மனைவி ராதா 36, தனது மகன் சூரியபிரகாஷூடன் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது திடீரென கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டியபடி வந்து மனு கொடுக்க முன்வந்தார்.
பின்னர்,'தங்களுடைய நிலத்தில் நுழைய உறவினர்கள் தடுத்து தம்மை மிரட்டி வருவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் போலீசாரும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறேன்,'' என்றார்.
இதனால் அதிர்ந்து போன பாதுகாப்பு போலீசார், விரைந்து சென்று ராதாவின் கழுத்திலிருந்த தூக்குக்கயிறை அவிழ்த்து, தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பெண் ஒருவர் மனு கொடுக்க வந்தபோது, திடீரென தூக்குகயிறை மாட்டிக்கொண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தையே அதிர வைத்துவிட்டது.