அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசி அக்கா மகன் தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்- ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா அக்கா மகன் தினகரனுக்கு அமலாக்கத்துறை ரூ28 கோடி அபராதம் விதித்ததை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
சென்னை: அன்னிய செலாவணி மோசடியில் (ஃபெரா வழக்கு) ஈடுபட்டதற்காக சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை ரூ28 கோடி அபராதம் விதித்ததை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. தமிழக முதல்வர் பதவிய கபளீகரம் செய்ய நினைத்திருக்கும் மன்னார்குடி கோஷ்டிக்கு முதலாவது மரண அடியாக இது கருதப்படுகிறது.
சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன். இவர்தான் தற்போது அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகிப்பவர்.
சசிகலாவை முதல்வராக்குவதற்கும் தினகரன் தீவிர முனைப்பில் இருந்து வருகிறார். அத்துடன் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பிலும் படுபிசியாக இருந்து வருகிறார்.
அன்னிய செலாவணி மோசடி வழக்குகள்
தினகரனின் வங்கி கணக்குகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து 1996-ஆம் ஆண்டு தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பாய்ந்தன. ஆனால் தாம் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என வாதிட்டார் தினகரன். இதை அமலாக்கத்துறை நிராகரித்தது.
தினகரன் அப்பீல்
இது தொடர்பான விசாரணையின் முடிவில் தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத் துறை. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறையிடம் தினகரன் மேல்முறையீடு செய்தார்.
ரூ28 கோடி விதித்தது சரியே
ஆனால் மத்திய அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதத் தொகை விதித்தது சரியே என அதிரடி உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
இன்று தீர்ப்பு
இதை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகல் அளித்தது. சசிகலா அக்கா மகன் தினகரனுக்கு அமலாக்கப்பிரிவு ரூ28 கோடி அபராதம் விதித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து தினகரனின் மனுவை டிஸ்மிஸ் செய்தது. தமிழக முதல்வர் பதவியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கும் மன்னார்குடி கோஷ்டிக்கு இது மரண அடியாக கருதப்படுகிறது.