திருவள்ளூரில் தீவிரமாக பரவும் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு - கட்டுப்பாட்டு அறை திறப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை கலக்கி வரும் மர்மக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பீதியை அதிகரித்துள்ளது. இதுவரை காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று நோய் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் வைரஸ் காய்ச்சல் என அறிவித்து, பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு கள் தொடர்வதால் திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் மருத்து வமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
திருத்தணி அடுத்த பொதட்டூர் பேட்டை, சொரக்காய்பேட்டை, கேசவராஜ குப்பம், காவேரிரா ஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
காவேரிராஜபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 4 சிறுவர்கள் காய்ச்சலுக்குப் பலியாயினர். இவர்களில் ஒரு சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் பொன்னேரி அருகே உள்ள கீரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். இதனால் கீரப்பாக்கம் கிராம மக்கள் டெங்கு பீதியில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் நேற்று மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த தேவன் என்பவரது மகன் சீனிவாசன். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். 2 தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் கடுமை யானதால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் நேற்றுமுன்தினம் சீனிவாசன் உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, சிறுவனின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தினர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே, பொன்னேரி அரசு மருத்துவமனையில் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டவர்களை சுகா தார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று பார்வையிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, மேற்கண்ட 5 நாட்களிலும் சுகாதாரப்பணியை மேற்கொள்ளும் வண்ணம் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அரசு கட்டிடங்கள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள், பள்ளி-கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் குப்பைகளை அகற்றுவது, கொசுப் புழுக்களை அகற்றுவது, கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
குடிநீர் ஆதாரங்கள் மற்றும் சேமிப்பிடங்களில் முழு அளவிலான சுத்தமும், சுகாதார விதிமுறைப்படி குளோரினேஷனும் உறுதி செய்யப்படும். தூய்மை மற்றும் நோய்த்தடுப்புக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் தொற்று நோய் குறித்து தகவல் தெரிவிக்கவும், தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில் பொதுமக்கள், தொற்று நோய் தொடர்பான தகவல்களை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 044 27665248 என்ற தொலைப் பேசி, 7548846801 என்ற செல்லிடப்பேசி மற்றும் 7548846803 கட்செவி அஞ்சல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.