”நீங்க வந்தா மட்டும் போதும்.... ஃப்ரீயாவே தர்றோம்” – "ஈ" ஓட்டும் பொறியியல் கல்லூரிகள்!
சென்னை: இன்னும் பொறியியல் கவுன்சிலிங் ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் இப்போதே தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கவலை ஆரம்பித்து விட்டதாம்.
வழக்கம் போல இந்த ஆண்டு எத்தனை காலியிடங்கள் வரப் போகிறதோ என்று.
இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறையின் கீழ் 1 லட்சத்து 78 ஆயிரத்து 917 மாணவர் காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வந்ததே கம்மிதான்:
இதை அண்ணா பல்கலைக்கழகம் நிரப்பும். ஆனால் இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 விண்ணப்பங்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளதாம்.
திருப்பி ஒப்படைக்கப்பட்ட இடங்கள்:
எனவே அப்ளை செய்த அனைவருக்கும் கல்லூரி கிடைக்கும் என்பதில் பிரச்சினை இல்லை. நிர்வாக கோட்டாவில் ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டு 21,741 இடங்களை கல்லூரிகள் திருப்பி ஒப்படைத்துள்ளன.
மீண்டும் 5000 இடங்கள்:
இதுதவிர ஜூலை 1 ஆம் தேதிக்குள் மேலும் 5000 இடங்கள் அரசிடமே ஒப்படைக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது.
காசு இருந்தா கல்லூரி:
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் தாறுமாறாக அதிகரித்து விட்டன. கையில் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் கல்லூரி உரிமையாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டு விட்டது. அதேசமயம் காலியாக இருக்கும் பி.இ இடங்களும் அதிகரித்து வருகின்றன.
காத்து வாங்கும் கல்லூரிகள்:
கடந்த 2013-14ல் காலியாக இருந்த சீட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது. கடந்த ஆண்டு 1.36 வட்சம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
முதல் தலைமுறை பட்டதாரிகள்:
முதல் தலைமுறையைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்கள் இந்த முறை 80,446 பேர்தான் அப்ளை செய்துள்ளனராம். இது கடந்த ஆண்டு 92,000 ஆக இருந்தது. இந்த 80,446 பேரில் மாணவர்கள்தான் அதிகம்.
மூடுவிழா பிராப்திரஸ்து:
அதாவது 52,197 பேர். மாணவிகள் 28,249 பேர் ஆவர். மொத்தத்தில் பல கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!