முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வல வன்முறை: உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செப்டம்பர் 3ம் தேதி நடந்த விநாயகர் ஊர்வலத்தின்போது வன்முறை மூண்டதும், அதன் தொடர்ச்சியாக போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பாகவும், போலீஸ் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் உண்மை கண்டறிய நியமிக்கப்பட்ட பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையிலான குழுவின் உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த செப் 3 ஆம் தேதி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் நடந்த வன்முறைகள் அதையெடுத்து போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் காவல்துறை நடத்திய மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவைகளின் உண்மை நிலையை அறிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் (NCHRO)தேசிய தலைவர் பேரா.அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினர் 22 ஆம் தேதி முத்துப்பேட்டை வந்தனர்.
இந்த குழுவினர் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். பின்னர் போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் நடத்திய அத்துமீறல்களை பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று அறிந்து கொண்டனர். தொடர்ந்து துப்பரவு தொழிலாளி சரோஜாவிடம் மற்றொரு போலீஸ்காரர் நடத்திய பாலியல் தொந்தரவுகளையும் நேரில் சென்று இக்குழுவினர் அறிந்து கொண்டனர்.
அதனையெடுத்து பாஜக திருவாரூர் மாவட்ட தலைவர் சிவா மற்றும் காவல்துறை துணைக் கண்கானிப்பாளர் கணபதி, புலனாய்வு அதிகாரி சண்முகவேல், திருவாரூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. அனார்கலி பேகம் உள்ளிடவர்களுடன் இக்குழு விரிவாக பேசியது.
இதையடுத்து நேற்று செப் 23ம் தேதி முத்துப்பேட்டை கொய்யா மகாலில் குழுவின் தலைவர் பேரா.அ.மார்க்ஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது இடைக்கால அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது குழுவினர் கூறுகையில், விநாயகர் ஊர்வல வன்முறைகளுக்கு தீர்வு மாற்றுப் பாதையே ஒரே தீர்வாகும் (மன்னை சாலை வழியாக செல்லுவது). போலீஸ்காரர் தாக்கப்பட்ட வழக்கில் அப்பாவி இளைஞர்களை கைது செய்த காவல்துறைக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வழக்கில் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவின் அறிக்கை காவல்துறையின் உயர் அதிகாரிகளின் பார்வைக்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தனர்.
குழுவில் பேரா.அ.மார்க்ஸ் தவிர சென்னை வழக்கறிஞர் கந்தசாமி, தலித் பண்பாட்டுப்பேரவை, திருத்துறைபூண்டி, மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர், அப்துல் காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி, முஹம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட், சென்னை, அபுஃபைசல், பத்திரிக்கையாளர், சென்னை ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.