கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைக்க களப்பணி.. வளாக இயக்குனர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கு தேவையான நில அளவு செய்யும் பணி தொடங்கியுள்ளது
நெல்லை: கூடங்குளத்தில் தற்போது உள்ள அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 2 அணு உலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நேற்று 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. வாளக இயக்குனர் தில்பக்சிங் சவுத்ரி இதில் கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் டோஸ்கோ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகள் முழு அளவிலான 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. இதுவரையிலும் இந்த அணு உலைகளில் 22,800 கோடி மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது என்றும் கூறினார்
மேலும் பேசிய அவர், 3 மற்றும் 4வது அணு உலைக்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. 5 மற்றும் 6வது அணு உலைக்கான களப்பணியும் தொடங்கப்பட்டுள்ளது. நிலத்தை தேர்ந்தெடுத்து அளக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
போதிய பாதுகாப்பு இல்லாததால் கூடங்குளத்தில் உள்ள மக்கள் தற்போது இருக்கும் அணு உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிதாக அணு உலைகளை அமைக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.