குந்தாரப்பள்ளி சந்தையில் குவிந்த 50,000 ஆடுகள்.. நாளை பக்ரீத்!
பக்ரீத் பண்டிகையொட்டி கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி சந்தையில் ஒரே நாளில் 50,000ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கிருஷ்ணகிரி: பக்ரீத் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தைக்கு அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகளின் வரவால் ஒரே நாளில் 50 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் மாபெரும் ஆட்டு சந்தை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையையொட்டி நடைப்பெற்ற இந்த ஆட்டு சந்தையில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி மட்டுமின்றி தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ஆடுகளை வாங்க உள்ளுர் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வருகை தந்ததால், ஆடுகளின் விற்பனையும், விலையும் உயர்ந்தது இதனால் விவசாயிகள் மகிழ்சியடைந்தனர்.
ஆடு வாங்க சந்தைக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், சந்தையில், வெள்ளாடு, செம்மரி ஆடு, பல்லாடு, குறும்பாடு, குறாடு உள்ளிட்ட பல்வேறு வகையான உயர் ரக ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆனால், ஆடுகளின் விலை அதிகமாக உள்ளது. இதில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டனர்.
குந்தாரப்பள்ளி சந்தையில் இன்று ஒரு நாளில் மட்டும், சுமார் 50 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.