கறுப்பு பணத்திற்கு எதிராக போராடுவோம்... வேலம்மாள் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி
கறுப்பு பணத்திற்கு எதிராக வேலம்மாள் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதோடு. குழந்தைகள் தினமான இன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.
சென்னை: முகப்பேறு கிழக்கில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் 14.11.2016 திங்கள்கிழமை காலை 9.30 மணி அளவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், 2001 சதுர அடி பரப்பளவு உள்ள விளையாட்டு மைதானத்தில் 2001 வேலம்மாள் பள்ளி மாணவர்கள் கறுப்புப் பணத்தைத் தடை செய்யக் கோரி உறுதிமொழி எடுத்தனர்.
கடந்த நவம்பர் 8ம் தேதியன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிராக புதிய போரை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார். இதற்காக எடுக்கப்பட்டுள்ள பல அதிரடி முடிவுகள் குறித்து, அவர் அறிவித்தார். அதன்படி, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லுபடியாகாது என்று கூறினார். இந்த அறிவிப்புகளால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள மோடி, ''துாய்மை இந்தியா திட்டத்துக்கு அளித்த ஆதரவை போல, பொருளாதாரத்தை துாய்மைப்படுத்தும் இந்த திட்டத்துக்கும் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்,'' என, உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் தற்காலிக கஷ்டங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். கறுப்புப் பணத்தால், இந்திய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படுவதால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் மோடி கூறினார்.
இதனிடையே பணம் செல்லாது என்று மோடி அறிவித்த பின்னர் கடந்த ஒருவார காலமாக மக்கள் கூட்டம் கூட்டமாக வங்கிகள், ஏடிஎம் வாசல்களில் நின்று கொண்டுள்ளனர். மோடியின் கறுப்பு பணத்திற்கு எதிரான போர் பலரிடம் வரவேற்பினை பெற்றுள்ளது. பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குழந்தைகள் தினமான இன்று, 2001 சதுர அடி பரப்பளவு உள்ள விளையாட்டு மைதானத்தில் 2001 வேலம்மாள் பள்ளி மாணவர்கள் கறுப்புப் பணத்தைத் தடை செய்யக் கோரி உறுதிமொழி எடுத்தனர்.
பழைய 500 ரூபாய் நோட்டுக்களும், புதிய 2000 ரூபாய் நோட்டு, புதிய 500 ரூபாய் நோட்டு போல பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.