தியாகங்கள்...எல்லை மீட்புக்காக பிச்சை எடுத்த பணக்கார ரசீத்; 'தலைவரால்' காறி உமிழப்பட்ட பிஎஸ்மணி!
1950களில் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை மீட்க நமது தியாகசீலர்கள் புரிந்த தியாகங்களை விளக்குகிறது இப்பேட்டி.
சென்னை: 1950களில் திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட வட தமிழக எல்லைப் பகுதிகளையும் கன்னியாகுமரி உள்ளிட்ட தெற்கு எல்லைகளை மீட்பதற்காகவும் நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்களை தியாகிகள் புரிந்துள்ளனர்.
இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளரும் திமுக செய்தித் தொடர்பாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டி:
சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்னுடன் தங்கி இருந்தார். அப்போது வடக்கெல்லை போராட்ட வீரர் ரசீத், பிரபாகரனை எப்படியும் சந்திக்க வேண்டும் என வற்புறுத்தி அழைத்து செல்ல வைத்தார்.
அப்போது வடக்கு எல்லை மீட்பு போராட்டங்களை தலைவர் பிரபாகரனிடம் விவரித்தார் ரசீத். பிரபாகரனும் இதை ஆர்வமாக கேட்டார். அப்போது ரசீத் சொன்ன ஒரு தகவல் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றாக வேண்டும்.
வசதி படைத்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ரசீத். வடக்கெல்லை போராட்டத்தின்போது அப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ம.பொ.சியை சந்திக்க வந்தார் ரசீத். அப்போது ரசீத்தை உடனே திருப்பதிக்கு போய் கூட்ட ஏற்பாடுகளை கவனிக்குமாறு ம.பொ.சி. கூறுகிறார்.
ஆனால் அந்த நேரம் ரசீத்திடம் கையில் பணம் இல்லை.. வீட்டுக்குப் போய் பணம் கேட்டு வாங்கவும் விரும்பாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நடந்தே சென்றாராம் ரசீத். திருப்பதி சென்றுவிட்டால் அங்கு சாப்பாடு மற்ற செலவுகளுக்கு உறவினர்களிடம் வாங்கிக் கொள்ளலாம்.. ஆனால் திருப்பதிவரை செல்ல டிக்கெட்டுக்கு பணம் வேண்டுமே...
இதனால் வேறுவழியே இல்லாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்ணில்பட்டவர்களிடம் காசு கேட்டு கேட்டு வாங்கி... கிட்டத்தட்ட பிச்சை எடுத்துதான் டிக்கெட் எடுத்தேன் என கூறியது எங்களை கதிகலங்க வைத்தது.
இதேபோல் தெற்கு எல்லைப் போராட்டத்தில் நேசமணியைப் பற்றி பலரும் பேசும் நாம் தியாகி பி.எஸ். மணியையும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும். தெற்கு எல்லை போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது தினமணியில் ஒரு கார்ட்டூன் வருகிறது. அப்போது பிரதி எடுக்க வசதியில்லை. அந்த கார்ட்டூனை தாமே மீண்டும் மீண்டும் வரைந்து நடந்தே சென்று அனைத்து பொதுக்கூட்டங்களிலும் கொடுத்து பிரசாரம் செய்தார்.
அப்போது பெரிய தலைவராக இருந்த ஒருவரிடமும் அதை கொடுத்தார் பி.எஸ். மணி. ஆனால் அப்பெரும் தலைவரோ பி.எஸ். மணியின் முகத்தில் காறி உமிழ்ந்து துப்பினார். தன்னுடைய சுயமரியாதைக்கு பங்கம் வந்தபோதும் கவலைப்படாமல் தெற்கு எல்லை மீட்புக்கான பிரசாரத்தை தொடர்ந்தார் பி.எஸ். மணி.. இத்தகைய தியாகிகள் நினைவு கூறப்பட வேண்டும்.
இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறினார்.