விறுவிறுப்பாகும் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்... வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்!
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. ஜனவரி 27ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து 2011 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தண்டனை விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியும், அவரது சட்டசபை உறுப்பினர் பதவியும் பறி போனது.
இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக நீண்ட தாமதத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பிப்ரவரி 13ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
மனுத் தாக்கல் 27ம் தேதி முடிவடைகிறது. வருகிற 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும், மேலும் 26 ம் தேதி குடியரசு தின விழாவையொட்டி அன்றைய தினங்களில் வேட்பு மனுதாக்கல் கிடையாது. வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற 28ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வருகிற 30ம் தேதி கடைசி நாளாகும்.
வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் வசதிக்காக ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரனிடம் மனுக்களைத் தாக்கல் செய்யலாம். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் கொடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனு தாக்கலையொட்டி ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்யும் போது அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும்.
இதுவரை 2 வேட்பாளர்கள்
முதலில் திமுகதான் தனது வேட்பாளராக என்.ஆனந்த்தை அறிவித்தது. அடுத்து அதிமுக சார்பில் எஸ். வளர்மதி போட்டியிடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். பிற பிரதான கட்சிகளின் சார்பில் இதுவரை வேட்பாளர் யாரு்ம் அறிவிக்கப்படவில்லை.