லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தது!!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 24-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
நேற்று வரை தமிழகம் முழுவதும் 758 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கு 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருமாவளவன்
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
டி.ஆர். பாலு
தஞ்சாவூர் திமுக வேட்பாளர் டி.ஆர் பாலு, காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
சுதீஷ்
சேலத்தில் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மகர பூஷணத்திடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
பாரிவேந்தர்
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமதுவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கோவை சி.பி. ராதாகிருஷ்ணன்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
கரூர் சின்னசாமி, ஜோதிமணி
கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, திமுக வேட்பாளர் சின்னச்சாமி ஆகியோர் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இன்றுடன் முடிவடைந்தது
இன்று கடைசி நாள் என்பதால் காலை முதல் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக இருந்தது. மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது.