சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது- சனி, ஞாயிறு விடுமுறை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 29ம் தேதி கடைசி நாளாகும். சனி, ஞாயிறு தவிர பிற நாட்களில் காலை 11 மணிவரை மாலை 3 மணிவரை வேட்புமனுக்கள் பெறப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளனர். நாளை 4வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் மனு தாக்கல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களில் தவறான விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளிடமே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தொகுதிக்கு இரண்டு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் மனுக்களை அளிக்கலாம்.
வேட்புமனு அளிக்கும் போது, ஒவ்வொரு வேட்பாளரும் அஞ்சல் தலை அளவிலான புகைப்படத்தை அளிக்க வேண்டும். இந்த புகைப்படம் வாக்குப் பதிவின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும். மேலும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது மூன்று வாகனங்களில் வர வேண்டும். அதற்கு மேல் வந்தால் அதற்கான செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.
வேட்புமனு தாக்கலின் போது, வேட்பாளருடன் நான்கு பேர் உடனிருக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளரின் அடிப்படைத் தகவல்கள் உடனடியாக தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த வேட்புமனு அப்படியே பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 64 பேர் வரை இருந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். அதாவது, 63 வேட்பாளர்கள், ஒரு நோட்டா என்ற வகையில் இருக்கும். 64க்கும் மேல் சென்றால் வாக்குச் சீட்டு முறை பின்பற்றப்படும். ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் (ஒரு நோட்டா சேர்த்து) பெயர்கள் இடம்பெறும்.
இன்று முதல் சனி, ஞாயிறு நீங்கலாக 29ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 30ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், வேட்பு மனுக்களை மே 2ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும்போது அளிக்கும் தகவல்கள், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்கள், வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் உடனடியாக சரி பார்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தவறான விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.