சினிமா பைனான்சியரின் ரூ1 கோடி செக் சீட்டிங் புகார்... பச்சமுத்து மீண்டும் கைது?
சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகங்களின் தலைவர் பச்சமுத்து ரூ.1 கோடி செக் மோசடி செய்ததாக பைனான்சியர் போத்ரா சென்னை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
வேந்தர் மூவிஸ் மதன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காசியில் போல் ஜலசமாதியாகப் போவதாக கூறி கடிதம் எழுதிவிட்டு மாயமானார். அவரை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.
எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் சீட்டுக்காக பணம் கொடுத்தவர்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பைனான்சியர் போத்ரா, எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்து மீது சராமாரியான குற்றச்சாட்டுக்களை கூறினார்.
காணாமல் போய் பல மாதங்கள் ஆகியும் மதன் கிடைக்காத நிலையில், பச்சமுத்துவை கைது செய்து விசாரித்தால் உண்மை நிலவரம் தெரிய வரும் என போத்ரா தெரிவித்தார். தங்கள் நிதி நிறுவனம் மூலம் பச்சமுத்து முன்னிலையில், மதன் "மொட்ட சிவா, கெட்ட சிவா" என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகக் கூறினார்.
மூன்று மாதங்களில் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக உறுதி பத்திரத்தில் கையெழுத்துயிட்டனர். ஆனால், இதுவரை அந்த பணம் தனக்கு கிடைக்கவில்லை என பைனான்சியர் போத்ரா குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் பச்சமுத்துவும் ஈடுபட்டுள்ளதால் அவரை கைது செய்யக்கோரி காவல் துறை ஆணையரிடம் தாம் மனு அளித்துள்ளதாகவும், பச்சமுத்துவை விசாரிக்கும்பட்சத்தில் உண்மை நிலவரம் வெளிவரும் எனவும் அப்போது போத்ரா கூறினார்.
இந்த நிலையில் ரூ.75 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பைனான்சியர் போத்ரா புதிய புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், எஸ்.ஆர்.எம் நிறுவனர் பச்சமுத்து ரூ.1 கோடி செக் மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை திருப்பிக் கேட்ட போது கொலை செய்து விடுவதாக பச்சமுத்து மிரட்டியதாகவும் போத்ரா குறிப்பிட்டுள்ளார்.