குஜராத்தில் திகு திகு.. ஆர்.கே.நகரில் விறுவிறு.. நாளையோடு முடிகிறது தேர்தல் பிரச்சாரம்
ஆர்.கே நகரில் வேட்பாளர்களின் இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் நாளை மாலையோடு முடிவடைய உள்ளது .
சென்னை : ஆர்.கே நகரில் நாளையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் காரணமாக அவரின் தொகுதியான ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் சூழலில், வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடு பிடித்து உள்ளது.
தி.மு.க சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேச்சை வேட்பாளராக டி.டி.வி தினகரனும் களத்தில் உள்ளனர். இவர்கள் போக பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க., சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆகியோரிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தி.மு.க.,வை ஆதரித்து உள்ளன. தங்கள் பலத்தை காட்ட ஆளும்கட்சியான அ.தி.மு.க பல்வேறு அமைச்சர்களை பிரச்சாரத்தில் இறக்கி உள்ளது. இவர்களோடு சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டி.டி.வி தினகரன் கடுமையாக போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருவதால் ஆர்.கே நகரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஒருபுறம் கடுமையான பிரச்சாரம் நடந்து வந்தாலும் மறுபக்கம் தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பையும் மீறி ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக, தி.மு.க சார்பில் அ.தி.மு.க மீதும், டி.டி.வி தினகரன் அணியின் மீதும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆர்.கே நகரில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பிரச்சாரம் முடித்துக்கொள்ள வேண்டும் என்கிற விதி இருப்பதால், ஆர்.கே நகரில் நாளை மாலையோடு பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.