ஜனவரி 5இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நெல்லை: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு 1.1.2015 ஆம் தேதியை தகுதியாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அன்று முதல் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், பெயர் திருத்தம் செய்ய விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாது கிராம நிர்வாக அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து 18 வயது நிரம்பிய ஏராளமான வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்தனர். நவம்பர் 10 ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டது.
பின்னர் அந்த பட்டியல் சரியாக உள்ளதா என வாக்கு சாவடி அலுவலர்களால் வீடு வீடாக சென்று சரி பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்தந்த தொகுதி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி ஆணை பிறப்பித்தனர்.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வரும் 5 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதை ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.