கமுக்கமாக இருந்து காரியம் சாதித்த புதுவை முதல்வர் ஏர்போர்ட் 'நாசா'
புதுச்சேரி: புதுவையில் யார் முதல்வர் என்ற குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த 16-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான திமுக 2 இடங்களையும் வென்றது. இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாட்களாகியும் புதுச்சேரி முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. சட்டசபை தேர்தல் களத்தில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றுதான் பிரசாரம் முன்வைக்கப்பட்டது.
கோதாவில் குதித்த நாராயணசாமி
ஆனால் திடீரென முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி முதல்வர் பதவிக்கான கோதாவில் குதித்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலராக இருக்கும் நாராயணசாமி சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் இல்லை.
போராடிய நமச்சிவாயம்
இருந்தபோதும் டெல்லியில் உள்ள தமக்கான மிக வலுவான லாபி மூலம் முதல்வர் பதவியை வெற்றிகரமாக பெற்று சாதித்திருக்கிறார் நாராயணசாமி. நமச்சிவாயமும் கூட டெல்லியில் முகாமிட்டு போராடிப் பார்த்தார்.
வென்ற நாசா
ஆனால் "டேக் இட் ஈசி" பாணியில் சென்னை விமான நிலைய வாசலில் செய்தியாளர்களிடம் பேசிவிட்டு செல்வதைப் போல முதல்வர் பதவியையும் லாவகமாக கைப்பற்றியுள்ளார் ஏர்போர்ட் 'நாசா'. புதுவையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நாராயணசாமி முதல்வராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை நமச்சிவாயமே அறிவித்தார்.
புதுவையின் காங். முகம்
1947-ம் ஆண்டு பிறந்த நாராயணசாமி பிஏ,பிஎல்,எம்.எல். படித்தவர். புதுவை மாநிலத்தின் காங்கிரஸ் முகமாக அறியப்பட்டவர். பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்த காலத்தில் இணை அமைச்சராக இருந்தவர்.
கடந்த லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட நாராயணசாமி சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.