சென்னையில் லைசென்ஸ் இல்லாமல் பேனர் வைத்தா ஜெயிலுதான்- மாவட்ட நிர்வாகம் அதிரடி
சென்னை: சென்னையில் உரிமம் பெறாமல் விளம்பர பேனர் வைப்போருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் பொறுப்பை கூடுதலாக வகிக்கும் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உரிமம் பெறாமல் வைக்கப்படும் விளம்பர பேனர்களை, போக்குவரத்து போலீசார் அகற்றி வருகின்றனர். தனியார் கட்டடங்களை கட்டும் நிறுவனங்களும், தங்களது விளம்பரங்களை வைக்க, உரிமம் பெற வேண்டும்.
உரிமம் பெறாமல் விளம்பர பேனர்களை வைக்க, கட்டட உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும், அவ்வாறு விதிமுறைகளை மீறி விளம்பர பேனர்களை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். சென்னை நகர, நகராட்சி சட்டப்படி, விளம்பர பேனர்கள் வைக்கும் உரிமம் வழங்க, சென்னை மாவட்ட ஆட்சிருக்கே தகுதி உள்ளது. விதிமுறைகள் மீறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் பெறாமல் பேனர்கள் வைக்கப்பட்டால் 044 2526 8320 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.