தாம்பரம் மார்க்கெட்டில் பயங்கர தீ.. தீயில் சிக்கி 10 கடைகள் நாசம்.. ரூ. 5 கோடி சேதம்
சென்னை: தாம்பரத்தில் இன்று பிற்பகல் நடந்த பயங்கர தீவிபத்தில் பிரபல பாத்திரக்கடை எரிந்து சேதமானது. 5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும், தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
தாம்பரம் பேருந்துநிலையம் எதிரே நெருக்கமான சண்முகம் சாலையில் உள்ளது ஸ்ரீமுருகன் ஸ்டோர்ஸ் என்ற பாத்திரக்கடை. இதன் கீழ்தளத்தில் ரோஜா ஸ்டோர்ஸ் என்ற ஹோம் அப்ளையன்ஸஸ் கடை உள்ளது.
முருகன் ஸ்டோர் கடையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கடையின் முன்புற பகுதியில் புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட ஊழியர்கள் அலறியடித்தபடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி கைகொடுக்கவில்லை. தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றன. ஆனால் அதற்குள் கடையின் முன்பகுதி பெருமளவில் எரிந்து நாசமாகின. 7 கடைகளுக்கு தீ பரவியது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி கிட்டதட்ட 2 மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது. கடையில் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கான காரணம் என்று காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.