தீ விபத்தில் சிக்கிய குமரன் தங்கமாளிகை லாக்கரில் 250 கிலோ தங்க நகைகள்- மீட்க ஆலோசனை
சென்னை சில்க்ஸ் தீ விபத்தில் குமரன் தங்க நகை மாளிகையும் பாதிக்கப்பட்டுள்ளது. லாக்கரில் சிக்கியுள்ள நகைகளை மீட்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை: தீ விபத்து ஏற்பட்டுள்ள குமரன் தங்கமாளிகை கடையின் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள 250 கிலோ தங்க நகைகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் அருகிலேயே உள்ளது ஸ்ரீ குமரன் தங்கமாளிகை. இதுவும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான். இந்த கடையில் கிலோ கணக்கில் நகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தி. நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த 35 மணி நேரத்திற்கும் எரிந்து கொண்டுள்ளது. தீ கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் இடிந்து விழுந்து தீ பற்றுகிறது.
சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் அருகிலேயே உள்ளது ஸ்ரீ குமரன் தங்கமாளிகை. இதுவும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான். இந்த கடையில் கிலோ கணக்கில் நகைகள் வைக்கப்பட்டுள்ளன.
லாக்கரில் நகைகள்
கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள லாக்கரில் சுமார் 250 கிலோ நகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ வேகமாக பரவியதால் ஊழியர்களால் அந்த நகைகளை மீட்கமுடியவில்லை.
நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரும் தீ விபத்தில் சிக்கியுள்ளது.
1000 டிகிரி வெப்பநிலை
அதே சமயம், இந்த லாக்கர் 1000 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டவை என்பதால், தீ விபத்தில் லாக்கரில் இருக்கும் நகைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என்று கடை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
பற்றி எரியும் தீ
இதையடுத்து லாக்கரில் இருக்கும் நகைகளை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக தீயணைப்பு துறையினரும், போலீசாரும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். தற்போது தீ கட்டுக்குள் வந்திருக்கிறது என்றாலும், அவ்வபோது சில பகுதிகளில் தீ எரிந்துக் கொண்டிருப்பதால், ராட்சத கிரேனில் அமர்ந்து தண்ணீரை பீய்ர்ச்சி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக கட்டிடத்தினுள் நுழை தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நகைகளை மீட்க நடவடிக்கை
தீயணைப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்த பிறகே லாக்கரில் உள்ள நகைகளை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.இதற்கிடையே தீ விபத்தில் சிக்கிய கட்டிடம் முற்றிலும் சிதைந்து போயுள்ளதால் அதனை உடனடியாக இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
போலீசில் புகார்
தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 27 மணி நேரத்திற்குப் பிறகே புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கட்டிடத்தை இடிக்கும் முன்பாக நகைகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.