பட பட வென சரிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் முகப்புப் பகுதி - வீடியோ
தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் துணிக்கடை கட்டிடத்தின் இடிப்புப் பணி மீண்டும் இன்று தொடங்கியது. அப்போது கட்டடத்தின் முகப்புப் பகுதி சட்டென சரிந்து விழுந்தது.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் தீக்கிரையானதைத் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடிப்புப் பணி இன்று தொடங்கியது. மழையால் நனைந்திருந்த கட்டிடம் இன்று சட சட வென இடிந்து விழுந்தது.
சில தினங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிட இடிப்புப்பணிகள், மீண்டும் இன்று தொடங்கின. இன்று இடிக்கும்போது கட்டடத்தின் முகப்பு பகுதி முழுவதும் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மே 31ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில்சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏழு மாடிக் கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதில் அப்பகுதி மாசடைந்தது.
இரண்டு நாட்களாக பற்றி எரிந்த தீயை 15 தீயணைப்பு வண்டிகளிலும் வந்த 150 தீயணைப்புத் துறை வீரர்களும் போராடி அணைத்தனர். தீப்பற்றி எரிந்த காரணத்தால் கட்டிடம் பலம் இழந்தது. அதையடுத்து அதை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து இடிக்கும் பணியைத் தொடங்கினார்கள்.
இன்று, இடையில் நான்கு நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த அப்பணி மீண்டும் தொடங்கியது. அப்போது, எதிர்பாராதவகையில் கட்டிடத்தின் முகப்பு பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.