சிவகாசி அருகே அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் விபத்து.. 4 பேர் உடல்கருகி பலி
சிவகாசி அருகே இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர்: சிவகாசி அருகே இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொழிலாளர்கள் பட்டாசுகளை அறையில் இருந்து லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
2 தொழிலாளர்கள் பலி
இதில் பட்டாசுகளை லாரியில் ஏற்றிய சேகர், ரவி என்ற இரண்டு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பட்டாசுகள் ஏற்றப்பட்ட லாரியும் எரிந்து எலும்புக்கூடானது.
விசாரணை
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்தனர். சம்பவ இடத்தில் கோட்டாட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உட்பட 2 பேர் பலி
இந்நிலையில் சிவகாசி அருகே காக்கிவாடான் பட்டியில் மற்றொரு தொழிற்சாலையில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் ஒரு பெண் உட்பட 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
பெரும் சோகம்
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிவகாசி அருகே ஒரே நாளில் 2 ஆலைகளில் ஏற்பட்ட தீவிபத்திஙல் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.