சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. கிராம மக்கள் சோகம்
சிவகாசி அருகே இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்: சிவகாசி அருகே இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசுகளை அறையில் இருந்து லாரியில் ஏற்றினர். அப்போது ஏற்பட்ட உராய்வால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
2 தொழிலாளர்கள் பலி
இதில் பட்டாசுகளை லாரியில் ஏற்றிய சேகர், ரவி என்ற இரண்டு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பட்டாசுகள் ஏற்றப்பட்ட லாரியும் எரிந்து எலும்புக்கூடானது.
விசாரணை
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்தனர். சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்
போலீசார் விசாரணை
பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உட்பட 2 பேர் பலி
இதைத்தொடர்ந்து சிவகாசி அருகே காக்கிவாடான்பட்டியில் மற்றொரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பெண் உயிரிழப்பு
மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முத்துமாரி என்ற பெண் சிகிச்சைபலனின்றி இன்று உயிரிழந்தார். அவரை தொடர்ந்து கணபதியம்மாளும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கிராம மக்கள் சோகம்
இதன்மூலம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.