கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் உடல் கருகிப் பலி.. பலர் படுகாயம்
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25க்கும் மேற்பட்டோர் தீக்காயத்துடன் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த கடையில் இன்று இரவு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியது.
இதனால் அந்த பகுதி முழுவதும் தீப்பிழம்பாகக் காட்சியளித்தது. தொடர்ந்து தீ மளமளவெனப் பரவி அருகிலிருந்த கடைகளிலும் பற்றியது. இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் அருகில் இருந்த கடைகளில் பணியாற்றி வந்த 25க்கும் மேற்பட்டோர் தீக்காயத்துடன் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் தியாகதுருகம் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
இந்த தீ விபத்து காரணமாக சங்கராபுரம் பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.